வியாழன், 18 செப்டம்பர், 2014

காவிகளால் நாசமாகப் போகும் கல்வித்துறை


வகுப்பறை என்பது நல்ல மனிதர்களை உருவாக்கும் இடம்.
அப்பேர்பட்ட வகுப்பறையும், கல்வியும் இன்று எப்படி உள்ளன?

தனியார்களின் வசம் சிக்கி சீரழிந்து வருகிறது.
ஒன்றாம் வகுப்புக்கே  லட்சம் ரூபாயை நன்கொடையாக கொடுக்கும் அவல  நிலையில் வந்து நிற்கிறது.
மேற்படிப்பு படிக்க பணம் இல்லாமையால் மாணவிகள் தற்கொலை செய்த அவலம்  இதே தமிழ் மண்ணில் அரங்கேறியுள்ளது.
இருக்கிற அரசுப் பள்ளி, கல்லூரிகளிலும் கழிப்பறை வசதியின்மை, ஆசிரியர் பற்றாக்குறை என பல பிரச்சினைகள் உள்ளன.

ஆங்கிலத்தை ஒரு மொழியாகப் பார்க்காமல் அதனை அறிவாகப் பார்த்து, தனியாரிடம் பணத்தை வாரி இறைக்க மக்கள் பழக்கப்பட்டுள்ளார்கள்.

இவ்வாறு கல்வித்துறையில் பல அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.
ஆனால் இதனை எந்த அரசும் கண்டுகொள்வதில்லை.
மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற பின்னர்  கல்வித்துறையில் செய்த சில புரட்சிகளைப் (?) பார்ப்போம்.

  • பள்ளிகளில் செத்தமொழி(சமஸ்கிருத) வார கொண்டாட்டம். 
  • குரு உத்சவ் என்னும் பெயரில் ஆசிரியர் தினம் 
  • ஆசிரியர் தினத்தில் மாணவர் முன்னர் தோன்றி, விளம்பரம் தேடிக் கொள்ளுதல்
  • தற்போது, இந்தியை முதன்மை மொழியாக கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) அறிக்கை

இதுபோக 'இந்தியைத் திணிக்க வேண்டும்' என காவிக்குரல் கடுமையாக எழுகிறது.
குருகுலக் கல்விமுறையை கொண்டு வரவேண்டும் என ஒரு நீதிபதி சில நாட்களுக்கு முன்னர் சொன்ன அவலமும் உள்ளது.

எப்படியாவது கொல்லைப்புற வழியாக இந்தி, சமஸ்கிருதம் என ஆரியப் பண்பாட்டை புகுத்த துடிக்கிறார்கள் காவிகள். 


மேலும் வலைத்தளங்களில் கட்டாய இந்தி, பள்ளிக் கல்வியில் வேத பாடங்களை கட்டாயமாக்குதல்,  இந்தியா வரலாற்று ஆய்வு குழுவில் பார்ப்பன ஆதிக்கம் என பெரும் அச்சுறுத்தலைத் தருகிறது பாஜக அரசு.

கல்வியை சேவையாக வழங்குவது குறித்து சிந்திக்காமல்,
அறிவியல் ரீதியில் மாணவர்களைப் பலப்படுத்தும்
செயலை முன்னிறுத்தாமல்,
'ஹிந்தி, ஹிந்து, ஹிந்தியா' என தனது பிற்போக்கு இந்துத்வ அரசியலை மாணவர்களிடம் திணிக்க முயற்சி செய்கிறது பாஜக அரசு.


பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் கோரிக்கையை மாநில அரசு உடனே முன்னெடுக்க வேண்டும்.
இல்லையேல் காவிகளின் கையில் சிக்கி கல்வித்துறை நாசமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக